பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தின் யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் இந்த மாதம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள சர்வதேச நிகழ்வு ஒன்று அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு கஜபா படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு அனுமதி வழங்க முடியாது என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்தை சிறீலங்கா இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
சனல்4 ஊடகத்தின் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே மேஜர் ஜெனரல் ஜகத் டயஸின் வீசா மறுக்கப்பட்டுள்ளதாகவும் வேறு குற்றச்சாட்டுக்கள் அவருக்கு எதிராக சுமத்தப்படவில்லை எனவும் சிறீலங்கா இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
சிறீலங்கா இராணுவ உயரதிகாரிகள் சர்வதேச நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு விடுதலைப் புலிகளின் ஆதரவு சக்திகள் தடை ஏற்படுத்தி வருவதாகவும் இது தொடர்பில் அரசாங்கம் குறித்த நாடுகளுடன் பேச வேண்டுமெனவும் சிறீலங்கா இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.